Tuesday, April 20, 2010

எரிமலை எப்படி பொறுக்கும் ?


கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெடித்து சிதறிய எரிமலை மீண்டும் தீயை கக்கியது. இதனால் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே விமான இயக்கம் இல்லாமல் வெளி நாடுகளில் சிக்கிய பயணிகள் கப்பல் மூலம் ஐரோப்பா திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் 14 ம் தேதி ஐஸ்லாந்தில் உள்ள இஜாப்ஜலாஜோகுல் என்ற எரிமலை திடீரென வெடித்து தீ குழம்பை கொப்பளித்தது. இது பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. எப்போதும் இல்லாத அளவு இந்த எரிமலை தனது சீற்றத்தை காட்டியது. அருகில் உள்ள பனிமலை மீதும் தாக்கி ஒரு புறம் வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடியது. இந்த எரிமலையில் இருந்து வெளியேறிய புகை மற்றும் சாம்பல் வானத்தின் 11 கி.மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. இதன் காரணமாக ஐரோப்பாவில் இருந்து வெளியேற , உள்ளே வர வேண்டிய விமானங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

லண்டன், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து . ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான விமானங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பெரும் பயணப்போக்குவரத்து பாதிக்கப்பட்டன. முக்கிய விமான நிலையங்களில் பெரும் பணக்கார பயணிகள் எல்லாம் ஆங்காங்கே இரவு முழுவதும் தவித்தனர் .


இந்த நிலைமை சீராகும் ஒரிரு நாளில் விமானம் இயக்கம் சீரடையும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் நேற்று இரவில் இந்த ஐஸ்லாந்து எரிமலை மீண்டும் வெடித்தது. இதனால் சாம்பல் புகை அடர்த்தி மேலும் அதிகரித்து விட்டது. லண்டனில் உள்ள தேசிய வான்வழி போக்குவரத்து கன்ட்ரோலர் ஒருவர் கூறுகையில்; சில விமான நிலையங்கள் திறக்கப்படும் என கருதி வந்த நேரத்தில் தற்போதைய எரிமலை கொப்பளிப்பு மேலும் தாமதப்படுத்தும் என தெரிகிறது. லண்டனில் பிரிட்டனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.

பொருளாதார மந்தம் : ஐரோப்பிய நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் வட அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தவித்த வண்ணம் உள்ளனர். ஐரோப்பிய கப்பற்படையினர் உஷார் படுத்தப்பட்டு கப்பலில் ஏற்றி வர புதிய கப்பல்கள் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கப்பல் மற்றும் தரை வழியாக தங்களது பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்றுமதி, இறக்குமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எரிமலையால் லண்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட நாடுகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிரீஸ், ஹங்கேரி, நார்வே உள்ளிட்ட நாடுகள் பாதிப்பில்லை.

பல விமான நிலையங்களில் பூக்கள் அனுப்ப முடியாமல் வாடி வருகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஏற்கனவே உலக அளவில் பொருளாதார மந்தம், இந்த விமான போக்குவரத்து பாதிப்பு மேலும் மந்தத்தை அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

ஐரோப்பா செல்ல வேண்டாம் : லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா, ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா , கனடாவுக்கு செல்லும் விமானங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்காகோ - மும்பை, சிக்காகோ - ஆமதாபாத் விமானங்கள் இந்தியா வந்து சேரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் வெளிநாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐரோப்போ நாடுகளுக்கு பயணத்தை நிறுத்தி வைக்குமாறு மத்திய விமான போக்குவரத்து துறையினர் இந்தியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment