Tuesday, April 6, 2010

கத்தோலிக்க பாதிரியார் 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, ஊட்டியில் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார்


அமெரிக்காவில் பணியாற்றிய கத்தோலிக்க பாதிரியார் 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளாமல் ஊட்டியில் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் என்ற புகார் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள மின்னசோடா மாகாணத்தில் கத்தோலிக்க பாதிரியாராக இருந்தவர் ஜோசப் பழனிவேல் ஜெயபால்.

வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜெயபால் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதுபற்றிய தகவல் வாட்டிகனை எட்டியதும், பாதிரியார் ஜோசப் பழனிவேலுக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் தற்போது அவர், ஊட்டியில் உள்ள அல்மராஜ் என்ற பிஷப்பின் கீழ் பணியாற்றி வருவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களை அவர் தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மின்னசோடாவில் பாதிரியார்களால் பாதிக்கப்பட்டோர் பலர் ஒன்று கூடி ஜோசப் பழனிவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் சர்ச் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

நேற்று செயின்ட் பால் நகரில் ஒன்று கூடிய இந்த அமைப்பினர், 'ஜோசப் பழனிவேல் போன்ற ஏராளமான பாதிரியார்கள் செய்த தவறுக்கு முழுமையான தண்டனை அனுபவிக்காமல் உள்ளனர்.

தவறின் பலனை அவர்கள் பெற்றால் தான் மற்றவர்களுக்கு அது ஒரு பாடமாக அமையும். எனவே ஜோசப் பழனிவேல் அமெரிக்கா வுக்கு வந்து முறைப்படி வழக்கை சந்திக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.

இவ்விவகாரம் குறித்து ஊட்டியில் உள்ள பிஷப் அலம்ராஜ் குறிப்பிடுகையில்,

"பாதிரியாரை எளிதாக நாங்கள் விரட்டிவிட முடியாது. அவர் பிஷப் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார். ஆசிரியர்கள் நியமனத்தில் எனக்கு உதவியாக இருக்கிறார்.

இதுபற்றி அவரிடம் விசாரித்த போது தான் குற்றமற்றவன் எனக் கூறுகிறார். எனக்கு வேறு வழி தெரியவில்லை" என்றார்.

No comments:

Post a Comment