Monday, May 10, 2010

பிரபாகரன் தாயார் சென்னையில் சிகிச்சை பெற அனுமதி


சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி 110-வது விதியின்படி ஒரு அறிக்கை படித்தார். அதன் விபரம் வருமாறு:-

கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி இரவு, பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மலேசியாவிலிருந்து சென்னைக்குச் சிகிச்சைக்காக வந்தபோது, அவர்கள் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக 17.04.2010 அன்று ஊடகங்களில் செய்தி வெளியானது. அதுபற்றி, சட்டமன்றப்பேரவையின் கூட்டத்தில் கடந்த 19.04. 2010-ம் நாளன்று விவாதிக்கப்பட்டது.

நான்அதற்கு பதில் கூறிய போது," பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவதுபற்றி, அவர்களிடமிருந்தோ- அவர்களுக்குத் துணைபுரிய விரும்பு பவர்களுடமிருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ, தகவலோ வரவே இல்லை என்றும், மத்திய அரசுக்கும்- பார்வதியம்மாளுக்கும் இடையே தான் இந்தப்பயணம் பற்றிய செய்தித்தொடர்பு இருந்திருக்கிறதே தவிர, தமிழக அரசுக்கு இதில் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும், அதன் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்றும், அப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் கோலாலம்பூருக்கே திரும்பச் சென்று வைத்திய வசதி பெறுவதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது என்றும், அவர்கள் மீண்டும் தமிழகத்தில்தான் வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அறிவிப்பார்களேயானால், அதைப் பரீசீலனை செய்து மத்திய அரசுக்கு எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தேன்.

30.04.2010 அன்று மின் அஞ்சல் மூலமாகப் பெறப்பட்டுள்ள, பார்வதி அம்மாள் பெருவிரல் ரேகை பதித்த கடிதத்தில், தனது சிகிச்சைக்காக கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வர மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக ஏற்பாடு செய்து தரும்படி எனக்கொரு கோரிக்கை வந்தது.

எனவே நான் ஏற்கனவே சட்டமன்றப் பேரவையில் அறிவித்ததிற்கிணங்க, பார்வதி அம்மாள் கேட்டுக் கொண்டபடி, மருத்துவச் சிகிச்சைக்குத் தமிழ்நாட்டிற்கு வந்து மருத்துவமனையிலே சிகிச்சை பெறுவதை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மத்திய அரசு ஆராய்ந்து அனுமதியளிக்கலாம் என்று பரிந்துரைக் கடிதம் மத்திய உள்துறைச் செயலாளருக்கு தமிழக அரசால் 01.05.2010 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விவரங்களைத் தமிழகச் சட்டப்பேரவையில், துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 3.05.2010 அன்று தெரிவித்தார். 3,4 தேதிகளில் டெல்லியில் நான் பிரதமரிடமும், சோனியா காந்தி அம்மையாரிடமும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களிடமும் இந்தப் பிரச்சினை குறித்து தெரிவித்து அவர்களின் உதவியை நாடினேன்.

அதன் தொடர்ச்சியாக நமது அரசின் சார்பில் அன்றாடம் மத்திய அரசின் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு விரைவிலே ஒரு நல்ல பதில் கிடைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டோம்.மத்திய அரசு 7-5-2010 தேதியிட்டு-மலேசியா, கோலாலம்பூரிலே உள்ள இந்தியத் தூதுவருக்கும்-நகல் நமக்கும்-அனுப்பியுள்ள கடிதம் ஒன்று நேற்றையதினம் வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் மனிதாபிமான அடிப்படையில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம் என்று எழுதியிருக்கிறார்கள்.

நிபந்தனைகளாக, பார்வதி அம்மாளின் தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும்; அவர் மருத்துவமனையிலேதான் தங்க வேண்டுமே தவிர, வேறெங்கும் தங்கக் கூடாது; அரசு மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெற விரும் பினால், தமிழக அரசு அதற்குத் தேவையான உதவி களையெல்லாம் செய்திட வேண்டும்; அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பங்கு வைத்திருப்பவர்களோடோ, எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது; பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ள லாம்; என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் பார்வதி அம்மாளோடு தொடர்பு கொண்டு ஆறுமாத காலத்திற்கு விசா’’ வழங்கலாம் என்றும், சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கு எந்தவிதமான குந்தகமும் இல்லாமல் இந்த ஆணை மத்திய அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக இது போன்ற நிகழ்வுகளில் முடிவு எடுப்பதற்கு சில காலம் பிடிக்கும் என்றாலும், அந்த அம்மையாரின் உடல் நிலை கருதி, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக இந்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மேல் மலேசியாவில் உள்ள அந்த அம்மையாரின் முடிவுக்கிணங்க தொடர் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்பதை இந்த அவைக்கும் நாட்டிற்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.

No comments:

Post a Comment