Wednesday, June 23, 2010

அஜய்க்காக `வோட்கா' வாங்கி வருவேன். அதில் எனக்கு வருத்தமேதும் இல்லை'' - கஜோல்



``கடையில் நான் எனக்கு தேவையான பொருட்களை வாங்கி வரும்போது அஜய்க்காக `வோட்கா' வாங்கி வருவேன். அதில் எனக்கு வருத்தமேதும் இல்லை'' - கஜோல்

கஜோலும், அஜய் தேவ்கனும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் கசிந்ததும் இந்தித் திரையுலகமே ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தது. காரணம், இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேரெதிரானவர்கள். கஜோல் படபடவென்று பேசுவார், அஜய் பேசவே மாட்டார், கஜோல் கலகல சுபாவம் கொண்டவர், அஜயோ கலந்து பழகாத கூச்ச சுபாவம் கொண்டவர், கஜோல் சிவப்பு, அஜய் மாநிறம், கஜோல் அழகுத் தாரகை, அஜய் ஆணழகன் என்று கூற முடியாதவர்...

எப்படி இவர்களுக்குள் ஒத்துப் போகும் என்று ஒட்டுமொத்தத் திரையுலகமும் முணு முணுத்தது. ஆனால் இன்றோ, `தம்பதிகள்னா அவங்கள மாதிரித்தான் இருக்கணும்' என்று சொல்ல வைத்து விட்டார்கள்.

``எப்போதும் உற்சாகமும் துடிப்புமாக இருப்பவர் கஜோல். நானோ அதிகம் வாய் திறந்து பேச மாட்டேன். ஆனால் எங்களின் வேறுபாடுகளே நாங்கள் ஒன்று சேர்ந்தபோது எங்களை முழுமையாக்கி விட்டன. நான் ஒரு பெண்ணிடம் விரும்பிய அனைத்தும் கஜோலிடம் இருக்கின்றன'' என்று பெருமிதமான கணவராகக் கூறுகிறார் அஜய்.
அதேநேரம், தனக்கே உரிய தனிச்சிறப்பான கண்கள் சிரிக்க கஜோல், ``திருமணத்துக்குப் பின் நான் எல்லையற்று வளர்ந்திருக்கிறேன். இது ஒரு அற்புதமான அனுபவம். என் வாழ்வில் நடந்த மிகச் சிறந்த விஷயம், திருமணம். சரியான நபர் என்று ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால், நான் எனக்காகத் தேடிக்கொண்ட இவர்தான் அவர்'' என்று பூரிக்கிறார்.

``வழக்கமான `ஐ லவ் ï' சொல்லும் வேலையெல்லாம் நடக்கவில்லை. நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம், இயல்பாக பழகினோம், ஒருகட்டத்தில் நட்பைத் தாண்டிய ஒன்று எங்களுக்கு இடையே மலர்ந்திருப்பதை உணர்ந்தோம். ஆனால் அதைப் பற்றி பெரிதாகப் பேசவில்லை. திருமணம் தானாகவே நடந்துவிட்டது'' என்கிறார் அஜய் தேவ்கன்.
உங்கள் திருமண வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று கேட்டால் கஜோலின் பதில்-
``ரகசியம் என்றெல்லாம் எதுவும் இல்லை. கணவன்- மனைவிக்கு இடையே பரஸ்பர அக்கறை என்பது அவசியம். வெறுமனே `ஐ லவ் ï' சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. மகள் `நைசா'வைப் போலவே அவர் மீதும் நான் யாரும் இடைபுகாத அன்புடன் இருக்கிறேன். அதேநேரம் அவருக்கு என்று சுதந்திரம் வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதே உணர்வு அவருக்கும் உண்டு. எங்களுக்கு இடையே வாக்கு வாதமோ, சண்டையோ வந்ததில்லை என்று நான் கூற மாட்டேன். அவைதானே வாழ்க்கையில் சுவை சேர்க்கின்றன?'' என்று நடைமுறை சார்ந்தவராகப் பேசுகிறார் கஜோல்.
கஜோல் கர்ப்பமாக இருந்தபோது, படப்பிடிப்பில் இருந்தாலும் மணிக்கொரு முறை அவருக்கு போன் செய்து கொண்டே இருந்தாராம் அஜய். கஜோலுக்கு தினசரி ஒரு பெட்டி பழங்கள் அனுப்பிக் கொண்டே இருந்திருக்கிறார்.
``இன்றும் ஒவ்வொரு நாள் மாலையும் வீட்டில் கஜோலைப் போய் பார்க்கும்போது, நாங்கள் ஆரம்பத்தில் பழகியபோது இருந்த அதே உற்சாகமும், ஆர்வமும் எனக்கு இருக்கிறது'' என்று வார்த்தைகளில் சந்தோஷத்தை வழிய விடுகிறார் அஜய்.
அஜயைப் பற்றி கஜோல் ஒருமுறை கூறும்போது, ``அஜயிடம் எரிச்சலூட்டும் பழக்கங்கள் அதிகம் இருக்கின்றன என்றபோதிலும், அஜய் அல்லாத ஒருவரை நான் விரும்பியிருக்க மாட்டேன். ஒரு கச்சிதமான மனிதர் என்பவர் போரடிப்பவராகத்தான் இருப்பார். அஜய் வித்தியாசமான நகைச்சுவை உணர்வு கொண்டவர், நல்ல சமையல் கலைஞர், தூய்மையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்''" என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்.

No comments:

Post a Comment